ad

Wednesday, January 13, 2010

"தலைவருக்கான " என் பகிரங்க மடல்....



தலைவரே நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ? உங்களை நான் உடனடியாக சந்திக்க வேண்டும் ...
சந்தர்ப்பம் கிடைக்குமா?
என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை தலைவரே...!
எவ்வளவு காலத்துக்குத்தான் நான் பொறுத்துக்கொள்வது என்மீது மேட்கொள்ள படும் இந்த கண்மூடித்தனமான தாக்குதல்களை ..
இவ்வாறான தொல்லைகள் தொடர்ந்தால் ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில்  எவ்வாறு என் பணியை செவ்வனே செய்ய முடியும் சொல்லுங்கள்...? இதற்கு நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.
குறிப்பாக இந்த தாக்குதல்கள் அதிகமாக இரவு நேரங்களில் தீவிரப்படுத்தப்படுவதனால் என்னால் நிம்மதியான தூக்கத்தை கூட எதிர்பார்க்க முடியவில்லை... இதனை தொடர்ந்தும் என்னால் அனுமதிக்க முடியாது, எனவே உங்களை உடனடியாக சந்திக்க வேண்டும்.... உங்களால் எனக்கு எதுவுமே செய்ய முடியாதா?

இருந்தாலும் பரவாயில்லை....
நான் துணிந்துவிட்டேன்,
எத்தனை பேர் வந்து தாக்கினாலும் பரவாயில்லை ... தனியாக நின்று எதிர்ப்பது என்று முடிவு செய்து விட்டேன் ....

எச்சரிக்கை விடுக்கிறேன் ......

இனி நீங்கள் என்மீது தாக்குதல் மேட்கொள்ள வரும் சந்தர்ப்பங்களில் கவனமாக இருங்கள் எந்த வேளையிலும் உங்கள்
மீது நச்சு திரவங்கள் விசிறப்படலாம்...
உங்களது நரம்பு மண்டலங்களை தாக்க புகை மண்டலங்கள் உருவாக்கப்படலாம்
இதனை தொடர்ந்து உங்கள் மீது , மின்சார வலைகள் மூலம் தாக்குதல்கள் ஏற்படுத்தப்படலாம் ....

இந்த தாக்குதல்களில் இருந்து முடிந்தால் தப்பித்து கொள்ளுங்கள் ...( இவ்வகையான தாக்குதல்கள்தான் இடம்பெறும் என்று சொல்லிவிட்டு தாக்குதல்கள் நடத்துவது துணிகரமான விடயமாகவே சர்வதேச சமூகம் நோக்கும் என்பதில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை ).

எனவே தலைவரே நீங்கள் என்மீது கோபம் கொள்ள கூடாது இவ்வாறான ஆயுதங்களை கையில் எடுத்தமைக்காக....
நான் பலமுறை விலகி விலகி போயிருக்கிறேன் , குறிப்பாக வலைகளுக்குள் என்னை மறைத்துக்கொண்டு பதுங்கி இருக்கிறேன் , அவ்வாறான சன்தரப்பங்களிலுள் என்மீது கண் மூடித்தனமான தாக்குதல்கள் மேட்கொள்ள பட்டதுதான் எனது இந்த முடிவுக்கான காரணம் மன்னித்து விடுங்கள் ...

இவர்களின் தாக்குதல்கள் மூலமாக எனது பெறுமதி வாய்ந்த ஒரு சில குருதி துளிகள் வீணாக்கப்படுவது பற்றி எனக்கு கவலை இல்லை , இவர்களினால் பரப்பப்படும் மிக கொடிய நோய்களான "டெங்கு , மலேரியா .." போன்ற நோய்களுக்குதான் எனக்கு பயமாக இருக்கிறது....


எனவே அன்பின் நுளம்பு ( கொசு) கூட்டத்தின் தலைவரே...!

உங்கள் நுளம்பு சகாக்களிடம் சமாதானமாக பேசி என் மீது கண்மூடித்தனமாக மேட்கொள்ள படும் தாக்குதல்களை நிறுத்த சொல்லுங்கள் .( முடிந்தால் என்னோடு பேச சொல்லுங்கள் , சமாதனம் பேச வருபவர்கள் மீது ஒரு போதும் தாக்குதல்கள் மேட்கொள்ள படமாட்டாது ..)


இல்லை எனின் மேட்சொன்ன அனைத்து தாக்குதல்களும் 'நுளம்பு(௦ கொசு)தீவிரவாதிகள் மீது மேட்கொள்ள படுவதை யாராலும் தடுக்க முடியாது... அது மட்டுமல்ல இந்த நடவடிக்கைகளை எடுக்க தவறும் பட்சத்தில் உங்கள் அத்தனை இருப்பிடங்களையும் தேடிப்பிடித்து அழிக்க நாங்கள் தயாராகவும் உள்ளோம் ,( இதற்கு அமெரிக்க பிரிட்டன் போன்ற நாடுகள் கட்டாயம் நிதி உதவி செய்யும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை).

நுளம்பு (கொசு) கூட்ட தலைவருக்கான என் மடலை தலைவரின் முகவரி தெரிந்தால் யாராவது தபாலில் சேர்த்து விடுங்கள் ப்ளீஸ்.... ( எவ்வளவு காலத்துக்குத்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது...)