ad

Showing posts with label தமிழ் ஊடகங்கள். Show all posts
Showing posts with label தமிழ் ஊடகங்கள். Show all posts

Friday, September 24, 2010

இனியும் இது தொடராமல் பார்த்துக்கொள்வோம்............

நீண்ட நாள் ஆதங்கமொன்று  இன்றைய தினம் பதிவாகிறது.
ஊடகத்துறையில் இருப்பவன் என்ற வகையில் இது பற்றி அடிக்கடி சிந்தித்து கவலைப்பட்டிருக்கிறேன், சில சமயங்களில் தாங்க முடியாத கவலையும் வந்திருக்கிறது.
சரி விடயத்துக்கு வருகிறேன்,
வானொலி, தொலைக்காட்சி போன்ற  இலத்திரனியல் ஊடகங்களில் இப்போது  இருக்கின்ற சில அறிவிப்பாளர்களது 'உச்சரிப்பு' காதுகளில் நச்சரிப்பாக இருக்கிறது காரணம் அந்த அளவுக்கு இப்பொழுது அதிகமான உச்சரிப்புப் பிழைகள் எங்கள் காதுகளை பதம் பார்கின்றன இதற்கு என்ன காரணம் என்று யோசிப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது,

ஊடகங்களில் இந்த உச்சரிப்பு பிழைகள் வருவதற்கும் அது தொடர்ச்சியாக அனுமதிக்கப்படுவதற்கும் என்ன காரணங்கள்?
  • சிறந்த உச்சரிப்பு திறமைகொண்ட அறிவிப்பாளர்களை தேர்ந்தெடுக்க உயர் அதிகாரிகள் தவறி விடுகிறார்களா? 
  • அல்லது அது பிழையான உச்சரிப்புக்கள் என்று அவர்களால் கண்டு கொள்ள முடிவதில்லையா? 
  • அல்லது அவர்களுக்கு சரியான பயிற்சிகள் கொடுக்க திறமை வாய்ந்தவர்கள் கிடைக்க வில்லையா?
இந்த கேள்விகள் என் மனதுள்ளே அடிக்கடி எழுவதுண்டு.
அதேவேளை இந்த உச்சரிப்பு பிழைகளை இப்பொழுது இருக்கின்ற இளம் ஒலி ஒளி பரப்பாளர்கள் நிச்சயம் கவனிக்க வேண்டும், ஏனென்றால் ஊடகங்கள், மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை செலுத்த வல்லன குறிப்பாக கல்வி கற்கும் மாணவர்கள் சில வேளைகளில் அறிவிப்பாளர்களின் உச்சரிப்புகளை கேட்டு,உச்சரிப்புகளை கற்றுக்கொண்ட காலமும் இருந்தது , குறிப்பாக இப்பொழுது இருக்கின்ற பிரபலமான தென்னிந்திய கலைஞர்களில்  அநேகமானவர்கள் தாங்கள்'இலங்கை வானொலியை' கேட்டுத்தான் தமிழ் கற்றோம் என்று பல மேடைகளில் சொல்ல கேட்டிருக்கிறேன்.
எனவே அந்த பொன்னான காலம் மீண்டும் வராது போய்விடும்  போலவே தோன்றுகிறது, காரணம் நாளுக்கு நாள் இந்த உச்சரிப்புப்  பிழையானது அதிகரித்துக்கொண்டே செல்கிறது,. இதில் இன்னுமொரு ஆச்சரியம் என்னவென்றால் புதியவர்கள் மட்டுமல்லாது சில அனுபவம் வாய்ந்த ஒலி ஒளிபரப்பாளர்களும் இதே தவறை விடுவதுதான் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாக இருக்கிறது.
ஒரு சிறந்த நேயரினாலேயே சிறந்த அறிவிப்பாளனாக இருக்க முடியும் எனவே நண்பர்களே முதலில் காதுக்கு வேலை கொடுங்கள் பிறகு வாய்க்கு வேலை வையுங்கள்.
-------------------------------------------------------------..............................

அத்தோடு சிலரது உச்சரிப்புக்கள் தொடர்ச்சியாக  பிழையாக வருவதற்கு சில  காரணங்கள்  இருக்கின்றன .
அதனையும் நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.

இங்கே சில மருத்துவ உண்மைகள்
 நண்பர்களே ! நாம் பேசும் செயலானது குரல்வளை உட்பட வாயின் பாகங்கள் நாக்கு ,பல் , மூக்கு ஆகியவற்றின் ஒருமித்த செயலாகும்.
குரலில் ஏதேனும் நோய் ஏற்படுவது போல , வாயின் இந்த உறுப்புகளிலும் மூக்கிலும் பல நோய்கள் ஏற்படும் இத்தகைய நோய்கள் ஏற்பட்டால் குரல் பாதிக்கப்படுவது போலவே உச்சரிப்பும் பாதிக்கப்படும் .
டான்சில்ஸ் , சினுடிஸ்,பல்,ஈறு நோய்கள் ,வாய்புண் முதலான வாய் நோய்கள் மற்றும் ப்ராங்டிஸ் முதலிய வாய் மற்றும் மூக்கு சம்பந்த பட்ட நோய்கள் சிலவாகும் .
கிலேப்ட் பிளேட் எனப்படும் மேலண்ண வெடிப்பு சிலருக்கு மூக்குவரை தொடர்ந்திருக்கும் . அதாவது இவர்களது மேலுதடு இரு பிரிவுகளாக இருக்கும் , இப்படி உள்ளவர்கள் பேசுவதற்கு அதிகம் சிரம படுவார்கள்.
ஆனால் மேலே கடைசியாக கூறிய நோய் உட்பட எல்லா  நோய்களுக்கும் சிகிச்சை முறைகள் இல்லாமலில்லை , ஆகவே நம் உச்சரிப்போ குரலோ பாதிக்கப்பட்டிருந்தால் அது நம் பொறுப்பாகவே இருக்க முடியும்.

நாம் பேசுகின்ற போது உச்சரிப்பு சரியாக இல்லாவிட்டால் முதலில் பேச்சில் தெளிவற்று கவர்ச்சி குறைந்து விடும் ,அதேநேரம் நாம் பேசுவது எதிராளிக்கு சரியாக புரியாது இதனால் மீண்டும் சொல்லவேண்டிய நிலை ஏற்படும் இதனால் நேர விரையம் தவிர்க்க முடியாததாகிவிடும். அத்தோடு சேர்ந்து எரிச்சல் தனது திறமையையும் காட்டிவிடும் கடைசியாக எமது காரியம் தோல்வியிலையே போய் முடிந்து விடும்.

பழகினால் கைவராதது எதுவும் இல்லை . உங்கள் உச்சரிப்பு சரியாக இல்லாவிட்டால், அதைப் பயிற்சியின் மூலமோ சிகிச்சையின் மூலமோ சீர் செய்து விட முடியும் . உங்களுக்குச் சில உச்சரிப்புகள் தெரியாவிட்டாலோ, குழப்பமாக இருந்தாலோ , மற்றவர் பேசுவதை கூர்ந்து கவனியுங்கள் . சந்தேகங்கள் விலகும் . பிறகு அதன் படி பயிற்சி எடுங்கள்.
பேச்சு ஒரு மனிதனை , அவன் வாழ்வினை, கல்வியினை, பண்பாட்டினை எதிரொலிக்கும் ஒரு கண்ணாடி . எனவே அந்த பேச்சில் கவனமாக இருங்கள்.
 "வாழ வைப்பதும் வாரி விடுவதும் வாய்தான் ." 
எனது ஆதங்கம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் , உங்களது கருத்துக்களையும் சொல்ல மறக்காதீர்கள்.